Type Here to Get Search Results !

பத்ம விருதுகள் 2026

TNPSC நடப்பு நிகழ்வுகள் 2026 | TNPSC Current Affairs Tamil | பத்ம விருதுகள் 2026
நடப்பு நிகழ்வுகள் Download
பத்ம விருதுகள் 2026

பத்ம விருதுகள் 2026

இந்தியாவில் பாரத ரத்னாவிற்கு அடுத்து உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.

1978, 1979, 1993 முதல் 1997-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு போர் சூழலின் போது பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை.

பத்ம விருதுகளானது பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளிலும் வழங்கப்படுகின்றன.

பத்மஸ்ரீ விருதானது புகழ்பெற்ற சேவைக்காகவும்; பத்ம பூஷன் விருது உயர்ந்த புகழ்பெற்ற சேவையாற்றி வருபவருக்காகவும்; பத்ம விபூஷன் அபூர்வமான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காகவும் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டுகள், மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொதுகாரியம், சிவில் சர்வீஸ், வர்த்தகம், தொழில் என எந்த ஒரு பிரிவிலும் தனித்தன்மை கொண்டு விளங்குபவர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கீழ்க்காணும் பல பிரிவுகளிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கலை: இசை, ஓவியம், சிற்பக்கலை, புகைப்படக்கலை, சினிமா, நாடகம்.

சமூக பணி: பொதுசேவை, அறக்கட்டளை, சமூக திட்டங்களில் ஈடுபாடு.

பொது விவகாரங்கள்: சட்டம், பொதுவாழ்க்கை, அரசியல்.

வர்த்தகம் & தொழில்: வங்கி, பொருளாதார நடவடிக்கைகள், மேலாண்மை, சுற்றுலா மேம்பாடு, வணிகம்.

மருத்துவம்: மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதத்தில் சிறப்பு நிபுணத்துவம், ஹோமியோ மருத்துவத்தில் நிபுணத்துவம், சித்தா, அலோபதி, இயற்கை மருத்துவம்.

இலக்கியம் & கல்வி: ஊடகம், கல்வி கற்பித்தல், நூல், ஆசிரியர், இலக்கியம், எழுத்தறிவு மேம்படுத்துதல், கல்வி சீர்திருத்தம்.

குடிமை பணிகள்: அரசு பணியாளர்களின் மிக சிறந்த நிர்வாகம் மற்றும் சேவை.

விளையாட்டுகள்: பிரபல விளையாட்டுகள், தடகளம், சாகசங்கள், மலையேறுதல், யோகா, விளையாட்டு சாதனைகள்.

அறிவியல் & பொறியியல்: விண்வெளிப் பொறியியல், அணு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.

மற்றவை: மற்றவைகளில் சேராத இந்திய கலாச்சாரம், மனித உரிமை பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உயிரின ஆர்வலர்.

பத்ம விருதுகள் அனைத்து நபர்களுக்கும் பொதுவானது. இனம், மதம், தொழில், பதவி, பாலினம் போன்ற வேறுபாடுகள் காண்பதில்லை.

இவ்விருதுகள் பொதுவாக இறந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனினும் தலைசிறந்த ஒருவருக்கு பத்ம விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வழங்கலாம்.

இந்த மிக உயர்ந்த பத்ம விருதுகள் ஒருவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் வழங்கப்படுமானால் ஐந்து வருட இடைவெளிக்கு பின்னரே பத்ம விருது வழங்கப்படும். ஆனால் மிகச்சிறந்த நபருக்கு விருது குழுவினரால் இதிலிருந்து விதிவிலக்கு தரப்படும்.

வழக்கமாக ஆண்டுதோறும் அனைத்து மாநில மற்றும் மத்திய ஆட்சி பகுதி அரசுகள், இந்திய அரசின் துறைகள், மத்திய அமைச்சரவை, பாரத ரத்னா மற்றும் பத்ம விருது பெற்றவர்கள் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பரிந்துரைகள் பெறப்படுகின்றன. இப்பரிந்துரைகள் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பெறப்படுகின்றன. மேலும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றின் ஆதரவுகளும் பெறப்படுகிறது.

விருது குழுவானது ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் விருது குழுவினரால் விருது வழங்கப்படுவர் பரிந்துரை செய்யப்படுவர். இப்பரிந்துரை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் அனுமதிபெற்ற பின்னர் விருது முறைப்படி அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். யாரொருவரும் விருது குழுவினரின் பரிந்துரையின்றி பத்ம விருதினை பெறமுடியாது.

 

பத்ம விபூஷன்

பத்ம விபூஷன் (Padma Vibhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னாவிற்கு அடுத்து நாட்டின் இரண்டாவது உயரிய விருது. பதக்கம் மற்றும் பாராட்டுதழ் வழங்கப்படுகிறது. இது முதன்முதலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து இந்திய குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

 

பத்ம விபூஷன் விருதுகள் 2026

1. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் - பொது விவகாரங்கள் - கேரளா

2. வயலின் கலைஞர் என். ராஜம் - கலை - உத்திர பிரதேசம்

3. பி.நாராயணன் - இலக்கியம் மற்றும் கல்வி - கேரளா

4. கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மறைவுக்குப் பின்) - பொது விவகாரங்கள்

5. இந்தி நடிகர் தர்மேந்திரா (மறைவுக்குப் பின்) - கலை - மகாராஷ்டிரா

6. பியூஷ் பாண்டே (மறைவுக்குப் பிறகு) - கலை - மகாராஷ்டிரா

7. எஸ்.கே.எம். மெயிலானந்தன் - சமூகப்பணி - தமிழ்நாடு

8. சதாவதானி ஆர் கணேஷ் - கலை - கர்நாடகா

9. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவுக்கு பின்) * உதய் கோடக் - வர்த்தகம் மற்றும் தொழில் - மகாராஷ்டிரா

10. வி.கே. மல்ஹோத்ரா (மறைவுக்குப் பின்) - பொது விவகாரங்கள் - டெல்லி

11. வெள்ளப்பள்ளி நடேசன் - பொது விவகாரங்கள் - கேரளா

12. விஜய் அமிர்தராஜ் - விளையாட்டு – அமெரிக்கா

 

பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது முதன்முதலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து இந்திய குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.

 

பத்மஸ்ரீ விருதுகள் 2026

பத்மஸ்ரீ விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் உட்பட 113 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பத்மஸ்ரீ விருது வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

1. கர்நாடக இசைப்பாடகிகள் காயத்ரி - ரஞ்சனி சகோதரிகள் - கலை - தமிழ்நாடு

2. எச்.வி. ஹண்டே - மருத்துவம் - தமிழ்நாடு

3. கே.ராமசாமி - அறிவியல் மற்றும் பொறியியல் - தமிழ்நாடு

4. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் - குடிமைப்பணி - தமிழ்நாடு

5. ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - கலை - தமிழ்நாடு

6. டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன் - மருத்துவம் - தமிழ்நாடு

7. ஆர்.கிருஷ்ணன் (மறைவுக்குப் பின்) - கலை - தமிழ்நாடு

8. ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் - சிற்பக்கலை - தமிழ்நாடு

9. எழுத்தாளர் சிவசங்கரி - இலக்கியம் மற்றும் கல்வி – தமிழ்நாடு

10. மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் - கலை - தமிழ்நாடு

11. சென்னை ஐஐடி இயக்குனர் வீ.காமகோடி - அறிவியல் மற்றும் பொறியியல் - தமிழ்நாடு

12. புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் என்பவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பத்மஸ்ரீ விருது பெறும் தமிழர்கள்

1. காயத்ரி மற்றும் ரஞ்சனி - கலை : இவர்கள் பிரபல கர்நாடக இசை கலைஞர்களாக அறியப்படுகின்றனர். சகோதரிகளான இவர்கள், கர்நாடக இசை பாடகர்களாகவும், வயலின் கலைஞர்களாகவும் தங்கள் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளாக இசைத்துறையில் உள்ள இவர்கள், ஸ்வதூரா என்ற புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் பல்வேறு ராகங்களைத் தொடர்ச்சியாகப் பாடுவதே இதன் வெளிப்பாடு. மிகவும் சவாலான இந்த அணுகுமுறையை, தங்கள் திறமையால் ஒவ்வொரு மேடையிலும் இவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2. எச்.வி. ஹண்டே - மருத்துவம் : சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டரான இவர், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் போலியோ மற்றும் தட்டம்மை ஒழிப்பில் பெரும் பங்காற்றியவர். இது தவிர, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதவிர, 4,500-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கட்டமைத்தவர். தற்போது இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

3. கே.ராமசாமி வேளாண் விஞ்ஞானி - அறிவியல் மற்றும் பொறியியல் : இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னணி வேளாண் விஞ்ஞானி இவர். வேளாண் தொழில்நுட்பம், உர நீர்ப்பாசனம், உயிர் எரிவாயு வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தேசிய கொள்கை வடிவமைப்பில் பங்காற்றியவர். 30-க்கும் மேற்பட்ட ஆய்வுத் திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

 

4. கே.விஜயகுமார் - குடிமைப்பணி : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், காடுகளில் நடக்கும் சண்டை, ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர். நக்சல் பயங்கரவாதம் மற்றும் வீரப்பன் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளில் உத்திகளை வகுத்துச் செயல்பட்டவர். சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுக் கொன்றவர்.

 

5. ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - கலை : திருமுறை பஜனை பாடல்களில் தனித்த அடையாளம் பதித்தவர். 60 ஆண்டுகளுக்கு மேலான இவரது இசைப் பயணம், பக்தி இசைக்கு உயிரூட்டிய குரலாக உள்ளது. உலகம் முழுதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, இளம் தலைமுறையினருக்கு திருமுறை மரபைக் கொண்டு சென்றவர்.

 

6. புண்ணியமூர்த்தி நடேசன் - மருத்துவம் : கால்நடை மருத்துவ துறையில் முன்னோடி. பசுக்களை பாதிக்கும் நோய்களுக்கு, நோய் எதிர்ப்பு மருந்துகளை அதிகம் பயன்படுத்தாமல், மூலிகை சிகிச்சை முறைகளை உருவாக்கி, பாரம்பரிய தீர்வுகளை வழங்கினார். இதனால் பாலில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் எச்சம் குறைந்தது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

 

7. ஆர்.கிருஷ்ணன் (மறைவுக்குப் பின்) - கலை : 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரும்பா ஓவியக் கலையை மீட்டெடுத்த ஓவியர். இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை உருவாக்கினார். குரும்பா கலையை உலகறியச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்.

 

8. ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் - கலை : பிரபலமான வெண்கல சிலை வடிவமைப்பாளர். 50 ஆண்டுகளுக்கும் மேலான தன் கலை பயணத்தில், உலகின் மிகப்பெரிய வெண்கல சிலைகள் உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கி உள்ளார். 100-க்கும் மேற்பட்ட கோவில்களின் திருப்பணிகளில் பங்கேற்றுள்ளார்.

 

9. எழுத்தாளர் சிவசங்கரி - இலக்கியம் மற்றும் கல்வி : தமிழ் இலக்கிய உலகில் மதிப்புக்குரிய எழுத்தாளர். 30-க்கும் மேற்பட்ட நாவல்கள், 150 சிறுகதைகளை எழுதியுள்ளார். சாதாரண மனிதர்களின் வாழ்வியலைத் தன் எழுத்துக்களால் உலகறியச் செய்தவர். இவருக்கு 2026-ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உணர்வுகள், உறவுகள், வாழ்க்கை மதிப்புகளைத் தன் எழுத்துக்களில் ஆழமாகப் பதிவு செய்தவர்.

 

10. மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் - கலை : மிருதங்க இசை மேதை. அதிலும் தஞ்சாவூர் பாணி மிருதங்க இசையில் தனித்திறன் கொண்ட கலைஞர். மிருதங்க கலையின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய பரவலுக்கு முக்கிய பங்காற்றியவர்.

 

11. சென்னை ஐஐடி இயக்குனர் வீ.காமகோடி - அறிவியல் மற்றும் பொறியியல் : புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி. மைக்ரோபிராசசர் எனப்படும் கணினி சிப்பை முதன்முறையாக ‘சக்தி’ என்ற பெயரில் உள்நாட்டிலேயே உருவாக்கியவர். தொலைத்தொடர்பு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கொள்கை அமலாக்கம் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளார்.

 

12. புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் - விளையாட்டு : சிலம்பம் கலையை மீண்டும் பிரபலப்படுத்திய முன்னணி பயிற்சியாளர். பாரம்பரிய போர்க்கலையை இளம் தலைமுறையிடம் கொண்டு செல்ல, மாமல்லன் தற்காப்பு மற்றும் நாட்டுப்புறக் கலை வளர்ச்சி மன்றம் அமைத்தார். இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.